காகித இறக்குமதியால் பாதிப்பு:பாதுகாப்பு வரி விதிக்க கோரிக்கை
புதுடில்லி;இந்திய காகித தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர், சவ்ரப் பங்குர் கூறியதாவது:'ஆசியன்' நாடுகளில் இருந்து மலிவு விலையில் காகிதங்கள் இறக்குமதியாவதால், உள்நாட்டு காகித தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், செய்தித் தாள் தவிர்த்து, இதர 'எச்.எஸ்' குறியீடு சார்ந்த அனைத்து காகிதம், காகித அட்டை ஆகியவற்றின் இறக்குமதிக்கு, 12 – 15 சதவீதம் பாதுகாப்பு வரி விதிக்க வேண்டும்.
ஆசியன் நாடுகளுடன் இந்தியா செய்து கொண்ட தாராள வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, காகிதம் மற்றும் காகித அட்டை இறக்குமதிக்கான அனைத்து கட்டணங்களும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளன. அடிப்படை வரி,10 சதவீதம், 2014, ஜனவரி முதல், பூஜ்யமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு காகித உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்திலும் பங்கெடுக்காமல் உள்ளனர். ஆகவே, மத்திய அரசு, உடனடியாக, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். காகிதம் மற்றும் காகித அட்டை இறக்குமதிக்கு, பாதுகாப்பு வரி விதித்து, உள்நாட்டு காகித தயாரிப்பு நிறுவனங்களை காக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.