ஜல்லிக்கட்டுக்காக சிம்பு அமைதியான வழியில் புதுவித போராட்டம் அறிவிப்பு

தினமலர்  தினமலர்

தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா நெருங்கி வரும் வேளையில் இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெறுமா..? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இப்போது மாணவர்களும் களத்தில் குதித்து உள்ளனர். மாணவர்கள் மட்டுமல்லாது நடிகர் கமலும் கூட சில தினங்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று தனது ஆதரவை தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமலை தொடர்ந்து நடிகர் சிம்புவும் ஜல்லிக்கட்டுக்காக ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் அறிக்கையாக வெளியிட்டவர், இன்று சென்னை திநகரில் உள்ள தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து ஜல்லிக்கட்டு குறித்து தனது ஆதரவை தெரிவித்ததோடு, வித்தியாசமான முறையில் போராட்டம் ஒன்றையும் அறிவித்திருக்கிறார்.

நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் பேசியதாவது... முதலில் நாம் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ் தான் எனக்கு எல்லாம், அதன்பிறகு தான் நான் இந்தியன். என்னை இந்தளவுக்கு வளர்த்தது தமிழ் தான். ஆனால் தமிழனுக்கு தொடர்ந்து பிரச்னை இருந்து கொண்டே இருக்கிறது. தமிழர்கள் பொறுமை காத்து வருகின்றனர்.

அநாதையாக்கிவிட்டீர்கள்

அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் நாம் பிளவுப்பட்டு கிடப்பதை எண்ணி வேதனையாக இருக்கிறது. எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி தமிழர்களை அநாதையாக்கிவிட்டார்கள். நாங்கள் அனைத்தையும் பொறுத்து கொண்டோம். ஆனால் இப்போது எங்கள் வீட்டிற்குள்ளேயே வந்து எங்கள் கலாச்சாரத்தின் மீதே கை வைத்து விட்டீர்கள், அதை பொறுத்து கொள்ள முடியாது.

தமிழகம் என்ன தனி நாடா.?

தமிழ்நாடு என்ன தனி நாடா..?, இந்தியாவில் தானே இருக்கிறது. பிறகு ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள். நம்ம ஊரில் பிறந்தவர்கள்கூட ஜல்லிக்கட்டுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறார்கள். சிலம்பாட்டம் படத்தில் காளையுடன் பழக மிகவும் கஷ்டப்பட்டேன். காளையை பழக்குவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும்.

வெட்கமாக இல்லையா...?

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களை கண்டு பெருமைப்படுகிறேன். இளைஞர்கள் போராட என்ன அவசியம் உள்ளது? தமிழக போலீஸைவிட சிறந்த காவலர்கள் உலகில் யாரும் கிடையாது. ஆனால், அந்த காவல்துறை இளைஞர்களை அடிக்கிறது.

நான் பேசுவேன்

கேட்பதற்கு யாரும் இல்லை என்று நினைத்தீர்களா..? நான் இருக்கிறேன். ஜல்லிக்கட்டு குறித்து பேச எந்த அமைப்புக்கும் அருகதை இல்லை. பசுக்களை துன்புறுத்தி கறக்கப்படும் பாலை குடித்தவர்களே காளை மீதான அக்கறை பற்றி பேசுகின்றனர். எந்த மிருகத்தையும் துன்புறுத்தக்கூடாது என்றால் நீங்கள் எதையுமே சாப்பிடமுடியாது.

போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை(ஜன., 12) மாலை தி.நகரில் உள்ள எனது வீட்டில் மாலை 5 மணிக்கு 10 நிமிடம் காந்திய வழியில் மவுன போராட்டம் நடத்தப்படும். தமிழ் உணர்வு உள்ளவர்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அனைவரும் இதேபோன்று நாளை மாலை அவரவர் இருக்கும் இடத்திலேயே 10 நிமிடம் எழுந்து நின்று மவுன போராட்டம் நடத்துங்கள். எனக்காக நிற்க வேண்டாம். நம் இனத்துக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நில்லுங்கள். எது எதற்கோ செல்பி எடுத்து பேஸ்புக்கில் போடுகிறவர்கள், தமிழுக்காகவும், தமிழன் என்ற உணர்வுக்காகவும் 10 நிமிடம் மவுன போராட்டம் நடத்துங்கள். பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் ஒன்றிணைந்து போராடுவோம். இதையெல்லாம் நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு சிம்பு கூறினார்.

மூலக்கதை