ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மார்க்கண்டேய கட்ஜூ கடிதம்

தினத்தந்தி  தினத்தந்தி
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மார்க்கண்டேய கட்ஜூ கடிதம்



புதுடெல்லி,
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடிதம் எழுதிஉள்ளார்.  தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்துவருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அரசுக்கு நெருக்கடி தரப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில்மாதவ் தவே கூறிஉள்ளார். இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடிதம் எழுதிஉள்ளார். 
மார்க்கண்டேய கட்ஜூ ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்,இப்போது ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். பேஸ்புக் பகுதியில் பதிவிட்டு உள்ளார். 
ஜல்லிக்கட்டை உடனடியாக அனுமதிக்கும் வகையில் மிருக வதை தடை சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொண்டு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்குமாறு வேண்டுகிறேன். 
காளைகளுக்கு கொடுமை எதுவும் நேராத வகையில், உதாரணத்துக்கு காளைகளின் கண்களில் எரிச்சல் வரவழைக்கும் வகையில் பொடி தூவுவது, காளைகளை அடிப்பது, அவற்றின் உடலில் சில இடங்களில் ஊசியால் குத்துவது, காளைகளை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்தல் போன்ற கொடுமைகள் எதுவும் நேராத வகையில் உரிய நிபந்தனைகள் விதித்து ஜல்லிக்கட்டை அனுமதிப்பதில் தவறு ஏது இருக்க முடியும் என்று புரியவில்லை. தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டான ஜல்லிக்கட்டுவை அனுமதிப்பதில் யாருக்கும் என்ன ஆட்சேபணை இருக்க முடியும் என்றும் புரியவில்லை. இதுபோன்ற விஷயங்களில் நடுநிலைத் தன்மை இருக்க வேண்டும். மனிதனுக்கு இணையாக மிருகங்களை வைக்க முடியாது.  உதாரணத்துக்கு, மீன் பிடிப்பதில், மீன் தண்ணீரில் இருந்து வெளியில் எடுக்கப்படுகிறது. இதனால் மீன் மூச்சுத் திணறி இறக்கிறது.  இது மீனுக்கு இழைக்கப்படும் கொடுமை இல்லையா? இதனால் மீன் சாப்பிடுவது தடை செய்யப்பட வேண்டுமா? வண்டியை இழுப்பதற்காக காளைகளின் விதைகள் நசுக்கப்படுகின்றன. இதனை தடை செய்ய வேண்டுமா? ஹலால் இறைச்சி தடை செய்யப்படுமா? பொங்கல் பண்டிகை வேகமாக நெருங்கி வருகிறது.  
ஜல்லிக்கட்டை மிகவும் நேசிக்கும் தமிழக மக்களின் சார்பாக நான் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன். மேலே குறிப்பிட்ட  அம்சங்களை தயவு செய்து கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன் என்று ஜனாதிபதிக்கு எழுதி உள்ள கடிதத்தில் முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேட்டுக் கொண்டு உள்ளார். 

மூலக்கதை