பேரூந்து விபத்தில் ஐவர் பலி! - 27 பேர் படுகாயம்!!
உறை பனி காரணமாக பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் பலியாகியுள்ளனர். மேலும் 27 படுகாயங்களுக்கு இலக்காகி உள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Saône-et-Loire மாவட்டத்தின் Charolles பகுதியில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. அப்பகுதி உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்த தகவலின் படி, இன்று ஞாயிற்றுக்கிழமை (8ஆம் திகதி) அதிகாலை 4.30 மணிக்கு RN 79 சாலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. போர்த்துக்கீய நாட்டவர்களை ஏற்றிக்கொண்டு, குறித்த பேரூந்து சுவிட்சர்லாந்து சென்றுகொண்டிருக்கும் போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் ஐந்து போர்த்துக்கீய குடியுரிமை கொண்ட ஐவர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 27 பேர் காயங்களுக்கு இலக்கானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்பு துறை வீரர்களும், மீட்புக்குழுவினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளானர். 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக வீதியில் உறைந்திருந்த பனியினாலேயே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.