பணத்தை விட ரசிகர்களை சம்பாதிப்பதுதான் மகிழ்ச்சி: ஹன்சிகா

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
பணத்தை விட ரசிகர்களை சம்பாதிப்பதுதான் மகிழ்ச்சி: ஹன்சிகா

நடிகர்-நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவற்றில் அதிகமான ரசிகர்கள் தங்களை பின்தொடர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். சமூக வலைத்தளத்தில் பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையை வைத்தே நடிகைகளின் மார்க்கெட் நிலவரங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

இதற்காகவே அடிக்கடி சமூகம் சம்பந்தமான கருத்துகளை பதிவிடுகின்றனர். தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்களையும் பதிவேற்றம் செய்கிறார்கள். நடிகை இலியானா தனது நீச்சல் உடை படங்கள் மற்றும் கவர்ச்சி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பின்தொடர்வோர் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் 40 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

நடிகை திரிஷா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. அவரை டுவிட்டரில் 30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இதற்காக ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து உள்ளார். நடிகை ஹன்சிகாவை பேஸ்புக்கில் 60 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இதற்காக அவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது:-

“பேஸ்புக்கில் எனக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. 60 லட்சம் பேர் என்னை பின்தொடர்கிறார்கள். ரசிகர்கள் தங்கள் மனதில் எனக்கு உயர்வான இடம் அளித்து இருப்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனை கோடி சம்பாதித்தோம் என்பது முக்கியம் இல்லை. எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது. ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் என்னை சின்ன குஷ்பு என்று அழைக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது.”

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

மர்ம ஆசாமிகள் சிலர் நடிகைகள் போல் போலி கணக்குகள் தொடங்கி ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் சங்கடங்களும் அவற்றை முடக்க சம்பந்தப்பட்ட நடிகைகள் சைபர் கிரைம் போலீசில் புகார்கள் அளிப்பதும் அடிக்கடி நடக்கின்றன. ஹன்சிகா சமீபத்தில் தன்பெயரில் போலி கணக்குகள் இருப்பதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

மூலக்கதை