“சென்னை 600028” – 2 திரை விமர்சனம்

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
“சென்னை 600028” – 2 திரை விமர்சனம்

2007ல் சூப்பர் ஹிட்டான ’சென்னை 600028’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு இப்போது தன் முதல் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்.அதே நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன். ரசிகர்களின் எதிர்பார்ப்பெல்லாம், ‘சென்னை 28’ அளவுக்கு அதன் இரண்டாம் பாகமும் ஜாலியாக, ரகளையாக இருக்குமா என்பதுதான்?

’சென்னை 28’ல் வந்த ஷார்க்ஸ் கிரிக்கெட் அணியினரில் சில வேலைக் காரணமாக பிரிந்துவிட கார்த்திக் (சிவா), பழனி (நிதின் சத்யா), கோபி (விஜய் வசந்த்) ஏழுமலை (அஜய்ராஜ்), ரகு (ஜெய்), சீனு (பிரேம்ஜி) ஆகியோர் மட்டும் நெருக்கமான நட்பைத் தொடர்கிறார்கள். ரகுவையும் சீனுவையுன் தவிர மற்றவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகளுடன் இருக்கிறார்கள்.

ரகுவுக்கு காதலி அனு (சானா அல்தாஃப்) உடன் திருமணம் நிச்சயமாகிறது. ரகுவின் திருமணத்துக்காக நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் தேனிக்கு செல்கிறார்கள், அங்கு அவர்களை விட்டுப் பிரிந்து சென்ற நண்பன் அரவிந்த (அரவிந்த் ஆகாஷ்) என்பவனை சந்திக்கிறார்கள். அவனுக்கு உள்ளூரில் ஒரு குட்டி தாதா போல் செயல்படும் மருதுபாண்டி (வைபவ்) உடன் பகை.

அரவிந்துக்காக நண்பர்கள் அனைவரும் மருதுபாண்டி நடத்தும் கிரிக்கெட் டோர்ணமண்டில் கலந்துகொண்டு விளையாடுகிறார்கள். அதனால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு ரகுவின் திருமணம் நின்றுபோகிறது.

ரகுவின் காதல் என்ன ஆனது? அதை வெற்றிபெறச் செய்யும் நண்பர்களின் முயற்சி வென்றதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை திரையில் காண்க.

சென்னை 28’ அளவுக்கு அதன் இரண்டாம் பாகமும் ஜாலியாக, ரகளையாக இருக்கிறது என்று சந்தேகமின்றி சொல்லலாம். அதிலிருந்த கிரிக்கெட், அதனால் ஏற்படும் போட்டி மனப்பான்மை, நட்பு, செண்டிமெண்ட், எமோஷன், காதல், கிளாமர், வயிறு வலிக்கும் காமடி என அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் இருக்கிறது.
அதோடு இந்தப் படத்தில் அதிக கதாபாத்திரங்களை சேர்த்திருக்கிறார். எமோஷனல் காட்சிகளும் கொஞ்சம் அதிகம். நாயகர்கள்(ஷார்க்ஸ் அணியினர்) அனைவருக்கும் ஜோடி உண்டு. அதோடு அவர்களது எதிர்ப்பு கோஷ்டியில் இருப்பவர்களுக்கும் வலு அதிகம்.

படம் தொடங்கும்போது இந்த ஒன்பது ஆண்டுகளில் உலகிலும் நம் வாழ்க்கை முறையிலும் கிரிக்கெட்டிலும் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும் முக்கிய கதாபாத்திரங்களின் வாழ்வில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும் சொல்லி அவர்களை அறிமுகப்படுத்துகிறது வெங்கட் பிரபுவின் வாய்ஸ் ஓவர். அதிலேயே பல ஜாலி, கேலி சிரிப்பு வெடிகளை கொளுத்திப் போட்டு ’இது அனைத்து கவலைகளையும் மறந்துவிட்டு ஜாலியாகப் பார்ப்பதற்கான படம் ’என்ற மனநிலையை ஏற்படுத்திவிடுகிறார். குறிப்பாக பழனியின் மனைவி யார் என்பதற்கு முதல் பாகத்திலிருந்து ஒரு தொடர்பை ஏற்படுத்திய விதம் சபாஷ் போட வைக்கிறது.

படம் நெடுகவே முதல் பாகத்தின் பகுதிகள் மிகச் சரியான இடங்களிலும் சரியான அளவில் ரசிக்கத் தக்க வகையில் இணைக்கப்பட்டு இது ஒரு அசலான இரண்டாம் பாகம் என்று பாராட்ட வைக்கிறது.

முதல் பாகத்தைப் போலவே இதிலும் மூன்று கிரிக்கெட் போட்டிகள் விரிவாக காண்பிக்கப்படுகின்றன. அதில் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியின் எதிரிகளாக இருந்த ராக்கர்ஸ் அணி இரண்டாம் பாகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. படவா கோபியின் கமெண்ட்ரியும் இருக்கிறது. இந்தப் போட்டிகளுக்கான காட்சிகள் அனைத்துமே கலகலப்புக்கும் பரபரப்புக்கும் முழு உத்தரவாதம். குறிப்பாக் கிரிக்கெட் ரசிகர்கள், லோக்கல் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் இவற்றுடன் தங்களைப் பொருத்திப் பார்த்துக்கொண்டு ரசிக்க முடியும்.

நாயகர்களின் மனைவியாக/காதலியாக வரும் பாத்திரங்களும் படத்துக்கு கலகலப்பூட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காதல்/எமோஷனல் காட்சிகளுக்கும் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஷார்க்ஸ் அணியினர் கிரிக்கெட் ஆடும் அழகை அவர்களது மனைவிகளே கலாய்ப்பதும் ஆலோசனை சொல்வதும் அதகளம்.

ஜெய்யின் காதலியின் குடும்பத்தினராக வருபவர்களும் அவர்களது செய்கைகளும் இன்னும் கொஞ்சம் வலுவாக இருந்திருக்கலாம். அவர்கள் சீரியஸான ஆட்களா அவர்களும் காமடிக்குத்தானா என்று குழப்பம் வருகிறது.

படத்தில் ஆங்காங்கே வெடித்து சிரிக்க வைப்பதோடு, நட்பு, காதல், குடும்பம், ஒவ்வொரு மனிதனும் தன்னை நிரூபித்துக்கொள்வதற்கான தனிமனிதத் தவிப்பு ஆகியவற்றை ஒட்டிய எமோஷனல் காட்சிகளும் சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. ஒரு இயக்குனராக வெங்கட் பிரபுவின் மிகப் பெரிய பலம் இதுதான். அவரால் காமெடி, சீரியஸ் என்று இரண்டையும் சரியாகச் செய்ய முடியும். இரண்டையும் சரியாகக் கலக்கவும் முடியும். எது எப்போது வரும் என்று ஊகத்திலேயே வைத்திருந்து ஆங்காங்கே ஆச்சரியங்களையும் தர முடியும். அவை அனைத்தும் இந்தப் படத்தில் சரியாகப் பயன்பட்டிருக்கின்றன.

இடைவேளைக்குப் பிறகு ஏற்படும் தொய்வு, இரண்டாம் பாதி கொஞ்சம் நீளமாக இருப்பது, அடுத்து என்ன நடக்கும் என்று பல இடங்களில் எளிதாக ஊகிக்க முடிவது, சில திருப்பங்கள் வசதிக்கேற்ப நிகழ்வது, சின்ன சின்ன லாஜிக் மீறல்கள் என்று குறைகளும் இருக்கின்றன. தேனியில் நடக்கும் காட்சிகளும் திடீர் திருப்பங்களும் இன்னும் கொஞ்சம் நம்பகத்தன்மையுடனோ அதிக சுவாரஸ்யத்துடனோ இருந்திருக்கலாம்.

படத்தில் ஒரு நடிப்புப் பட்டாளமே இருக்கிறது. ஜெய்க்கு கொஞ்சம் அதிக முக்கியத்துவம் என்று சொல்லலாம். அந்தப் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

மிர்ச்சி சிவாவுக்கு இது மிகச் சரியான கம்பேக் படம் என்று சொல்லலாம். மனிதர் தன் பாணியிலான காமெடி வசனங்களில் அதகளப்படுத்துகிறார். அதோடு அவர் பாத்திரத்தை வைத்து இணையதள திரை விமர்சகர்களை கலாய்த்திருக்கும் விதம் செம்ம கலாய்.

வில்லனைப் போன்ற வேடத்தை ஏற்றிருக்கும் வைபவ் தேனி வட்டார வழக்கில் மட்டுமல்ல,உடை, உடல்மொழி, எக்ஸ்பிரஷன் என அனைத்திலும் மதுரைத் திமிர் நிறைந்த அடாவடி இளைஞனை அப்படியே கண்முன் நிறுத்தி சபாஷ் வாங்குகிறார்.

பிரேம்ஜி நகைச்சுவைக்கு கச்சிதமாகப் பயன்பட்டிருக்கிறார். தன் வழக்கமான பாணியிலேயே காமெடி செய்தாலும் எங்கும் அலுப்பு ஏற்படவில்லை. நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய்ராஜ், அரவிந்த் ஆகாஷ், மஹத், கார்த்திக், அபினய் வட்டி, சுப்பு பஞ்சு, சந்தான பாரதி டி.சிவா என அனைவரும் தத்தமது பங்கை சரியாகச் செய்திருக்கிறார்கள். முதல் பாதியில் ஷார்க்ஸ் அணியை தோற்கடிக்கும் அணியின் சிறுவனாக வந்த ஹரி பிரஷாந்த் இந்தப் படத்தில் இளைஞானாக வந்து தனி முத்திரை பதிக்கிறார்.

சிவாவின் மனைவியாக விஜயலட்சுமி, நிதின் சத்யாவின் மனைவியாக கிருத்திகா, அஜய்ராஜின் மனைவியாக மகேஷ்வரி, ஜெய்யின் காதலி சானா அல்தாஃப் (அறிமுகம்), விஜய் வசந்தின் மனைவியா அஞ்சனா கீர்த்தி ஆகியோரும் குறை சொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்கள். மணிஷா யாதவ், ‘சொப்பன சுந்தரி’ பாடலில் கவர்ச்சியை அள்ளித் தந்து இளைஞர்களை கிறங்கடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை சிறப்பு. ‘சொப்பன சுந்தரி’ பாடலும், ’வரோம் சொல்லு தள்ளி நில்லு’ பாடலும் கேட்க நன்றாக உள்ளன. பாடல்களைப் பொறுத்தவரை வெங்கட் பிரபு-யுவன் கூட்டணியின் மேஜிக் மிஸ்ஸிங்.

ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவு சென்னையையும் பசுமை நிறைந்த தேனியையும் சிறப்பாகப் படம்பிடித்துள்ளது. பிரவீண் கே.எல். இன் படத்தொகுப்பும திரைக்கதையின் சுவாரஸ்யத்துக்குத் தக்க துணைபுரிவதாக உள்ளது.

மொத்தத்தில் குறைகளைக் காட்டிலும் நிறைகளே அதிகமாக இருப்பதாலும் பல இடங்களில் ரசித்து கைதட்டி சிரிக்க முடிவதாலும் திரையரங்கை விட்டு வெளியேறும்போது ஒரு ஜாலியான படம் பார்த்த நிறைவு ஏற்படுகிறது.

மூலக்கதை