ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான வதந்தி.. வெறிச்சோடி கிடக்கும் சென்னை !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான வதந்தி.. வெறிச்சோடி கிடக்கும் சென்னை !

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான வதந்தி பரவியதைத் தொடர்ந்து சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டன. சாலைகளும் வெறிச்சோடிய நிலையில் உள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து இன்று மாலை தவறான தகவல் வெளியானதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. வதந்தி வெளியான சில நொடிகளிலேயே தமிழகம் முழுவதும், கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது. பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், டீ கடை, ஓட்டல்கள் என அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது.

இதற்கிடையில் சென்னையில் உடனடியாக அனைத்து கடைகளும் மூடப்பட்டதோடு, வாகனங்களில் சென்று கொண்டிருந்த மக்களும் உடனடியாக வீடுகளுக்கு திரும்பினர். பெரும்பாலான அரசு பேருந்துகள் உடனடியாக அந்தந்த பணிமனைக்கு திருப்பி விடப்பட்டது.

பதட்டமான சூழல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டது. இதனால், பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

மூலக்கதை