சிங்கம்-3 படத்துக்கு சிக்கல் மேல் சிக்கல்

தினமலர்  தினமலர்
சிங்கம்3 படத்துக்கு சிக்கல் மேல் சிக்கல்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், சிங்கம் 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 'சிங்கம் 3' படத்துக்காக இருவரும் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். சிங்கம் படத்தின் முந்தைய பாகங்களில் உள்ளூர் போலீஸாக துரைசிங்கம் என்ற வேடத்தில் நடித்த சூர்யா, இந்தப்படத்தில் விசாகப்பட்டிணத்தில் பணியாற்றும் 'யுனிவர்சல் காப்'பாக நடித்திருக்கிறார்.

அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் ஆந்திராவிலேயே நடைபெற்றது. இதற்கு கதைக்களம் விசாகப்பட்டிணம் என்பது மட்டும் காரணமில்லை. எஸ்-3 படத்தை தெலுங்கில் வெளியிட வேண்டும் என்ற திட்டத்தில் நேரடி தெலுங்குப்படத்தைப்போலவே சிங்கம் 3 படத்தை எடுத்துள்ளனர். இப்படியாக பெரிய அளவில் தெலுங்கில் மார்க்கெட்டிங் செய்யும் திட்டத்தில் படத்தை எடுத்தவர்களுக்கு தற்போது அதிச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

வரும் 16ஆம் தேதி 'சிங்கம் 3' படத்தை தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலம் ஒரேநாளில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் ராம்சரன் நடித்த துருவா படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 9 ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால், சிங்கம் 3 படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. துருவா படம் நிச்சயமாக மூன்று வாரங்கள் ஹவுஸ்புல்லாக ஓடும் என்ற நம்பிக்கையில் சிங்கம் 3 படத்தை திரையிட ஆந்திர தியேட்டர்காரர்கள் ஆர்வம் காட்டவில்லை. எனவே, சிங்கம்-3 படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறையை ஒட்டி டிசம்பர் 23 ஆம் தேதி 'சிங்கம் 3' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். இதே டிசம்பர் 23ஆம் தேதி அன்று ஜெயம் ரவியின் 'போகன்' படமும் வெளியாகவிருப்பதால் சிங்கம் -3 படத்தின் தியேட்டர் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை