அதிமுக., தலைமையகத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடி மீண்டும் ஏற்றப்பட்டது
தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என மருத்துவர்கள் கூறிவந்த நிலையில் நேற்று மாலை முதலமைச்சருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அப்பல்லோ மருத்துவர்கள் முதல்வரை தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் இறந்துவிட்டதாக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இதை தொடர்ந்து தொண்டர்கள் துக்கத்தில் ஆழ்ந்தனர். கண்ணீரில் கரைந்தனர். ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.இதையடுத்து அதிமுக., தலைமையகத்தில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
இந்நிலையில் அவர் இறந்ததாக வந்த செய்தியை மறுத்து, ஜெயலலிதா உயிரோடு தான் உள்ளார். அவருக்கு அனைத்து உயிர்பாதுகாப்பு சிகிச்சைகள் தொடர்வதாகவும், அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.