அரை இறுதியில் கேரளா பிளேஸ்டர்ஸ்
கொச்சி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 3வது சீசன் கடைசி லீக் ஆட்டத்தில், நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கேரளா பிளேஸ்டர்ஸ் எப்சி அணி அரை இறுதிக்கு முன்னேறியது. கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த விறுவிறுப்பான இப்போட்டியில் கட்டாய வெற்றிக்காக நார்த்ஈஸ்ட் அணியும், குறைந்தபட்சம் டிரா செய்தாலே அரை இறுதிக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிடலாம் என்ற சாதகமான நிலையில் கேரளா பிளேஸ்டர்சும் வரிந்துகட்டின. இரு அணி வீரர்களும் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தியதால் முதல் பாதியில் கோல் ஏதும் விழாமல் சமநிலை வகித்தன. இடைவேளைக்குப் பிறகு தாக்குதலை தீவிரப்படுத்திய கேரள அணி 66வது நிமிடத்தில் வினீத் அபாரமாக கோல் அடிக்க 1-0 என முன்னிலை பெற்றது. பதில் கோல் அடிக்க நார்த்ஈஸ்ட் வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால் கேரளா பிளேஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி 22 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்ததுடன், கம்பீரமாக அரை இறுதிக்கு முன்னேறியது. நார்த்ஈஸ்ட் 5வது இடம் பிடித்து (14 போட்டியில் 18 புள்ளி) ஏமாற்றத்துடன் வெளியேறியது. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த மும்பை (23), கேரளா (22), டெல்லி (21), கொல்கத்தா (20) அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.