சென்னை கோயம்பேட்டில் நடந்த டிரைவர் கொலையில் ஒருவர் கைது

தினத்தந்தி  தினத்தந்தி
சென்னை கோயம்பேட்டில் நடந்த டிரைவர் கொலையில் ஒருவர் கைது

பூந்தமல்லி,

கோயம்பேட்டில் நடந்த டிரைவர் கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

டிரைவர் கொலை

சென்னை கோயம்பேட்டில் டைல்ஸ் கடை வைத்திருப்பவர் கருணாகரன். இவரது உறவினர் தேவதாஸ் பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த டிரைவராக வேலை செய்துவந்தார். அவரது மனைவியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக சில தினங்களாக இரவில் அந்த கடையின் மேல் உள்ள அறையில் தூங்கி வந்தார்.

அவர் நேற்று முன்தினம் முகத்தில் டைல்ஸ் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த கொலை குறித்து கோயம்பேடு போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். சம்பவத்தின்போது அந்த நேரத்தில் அங்கிருந்த செல்போன் இணைப்புகளை வைத்தும், கடைசியாக அங்கு வந்து சென்றது யார்? என்றும் விசாரித்தனர்.

போலீஸ் விசாரணை

அப்போது டைல்ஸ் கடையில் வேலை பார்க்கும் ஒருவரின் உறவினர் சுதந்திரராஜா(வயது 35) என்பவர் அவரது துணிகள் அடங்கிய பையை வைத்துவிட்டு சென்று இருந்தார். அதனை எடுப்பது குறித்து அன்று இரவு செல்போனில் பேசி உள்ளார். அதன்பிறகு அந்த பையை காணவில்லை. இதனால் சுதந்திரராஜா மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

போலீசார் சுதந்திரராஜாவை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் தான் கொலையாளி என தெரிந்தது. காவலாளியாக வேலை செய்துவந்த சுதந்திரராஜா நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு கோயம்பேடு வந்துள்ளார். வேலைக்கு செல்ல நேரம் ஆனதால் தனது துணிகள் இருந்த பையை கடையின் மாடியில் உள்ள அறையில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். இரவு நீண்ட நேரம் கழித்து வந்து பார்த்தபோது கடையின் முன்பு இருந்த இரும்பு கேட் பூட்டி இருந்தது.

வாக்குவாதத்தில் கொலை

பையை எடுப்பது குறித்து கடையில் வேலை செய்யும் உறவினரிடம் போன் செய்து கேட்டார். அப்போது மாடியில் தேவதாஸ் என்பவர் இருப்பார், அவரிடம் கேட்டு எடுத்துக்கொள் என்று கூறியுள்ளார். இதையடுத்து இரும்பு கேட்டின் மீது ஏறி குதித்து மாடிக்கு சென்றார். அவரை குடிபோதையில் இருந்த தேவதாஸ் கடையில் திருடுவதற்கு அவர் வந்துள்ளதாக நினைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சுதந்திரராஜா கல்லை எடுத்து தேவதாஸ் தலையில் ஓங்கி அடித்தும், முகத்தில் கல்லை வைத்து குத்தியும் கொலை செய்துவிட்டு சென்று இருந்தது தெரியவந்தது.

சுதந்திரராஜாவை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா?, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மூலக்கதை