வீர சாகச சண்டை போட வேண்டும்; “அதிரடியான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை”: ...

தினத்தந்தி  தினத்தந்தி
வீர சாகச சண்டை போட வேண்டும்; “அதிரடியான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை”: ...

ஐதராபாத்,

“வீர சாகசமாக சண்டை போடும் அதிரடியான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை” என்று நடிகை காஜல் அகர்வால் கூறினார்.

பேட்டி

நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:-

“கதாநாயகிகள் மென்மையானவர்கள். அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளாலும் முரடுத்தனமாக சண்டை போட்டு நடிக்க முடியும். கடந்த காலங்களில் பல நடிகைகளால் இது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில், கிடைத்த கதைகளில் நடித்தேன். காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களும் இருந்தன. ஆனால் இப்போது அப்படி இல்லை. கதை தேர்வில் மெனக்கெடுகிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறேன். மற்ற கதைகளை நிராகரித்து விடுகிறேன்.

அதிரடி படங்கள்

இனிமேல் கண்ட படங்களில் எல்லாம் நடித்து இமேஜை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். நான் சமீபத்தில் நடித்து திரைக்கு வந்த படங்கள் அனைத்தும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன. எனது நடிப்பு திறமையை நிரூபிப்பதாகவும் அமைந்தன. அடுத்த கட்டமாக வீரதீரமாக சண்டை போடும் அதிரடி கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

டைரக்டர்களிடம் இருந்து அதுபோன்ற கதைகளை எதிர்பார்க்கிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் அதிரடி படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது இல்லை. அப்போது நிறைய சண்டை படங்கள் பார்த்து இருக்கிறேன். நானும் அதுபோல் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது இல்லை. ஆனால் இப்போது அந்த ஆசை வந்து இருக்கிறது.

வில்லன்கள்

தாவி குதித்து வில்லன்களுடன் சண்டை போட்டு நடிக்க விரும்புகிறேன். அதற்கான கதையை தேடி வருகிறேன்.”  இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

மூலக்கதை