தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க – ...

தினத்தந்தி  தினத்தந்தி
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க – ...

சென்னை,

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில், அ.தி.மு.க – தி.மு.க. நேரடியாக மோதலில் ஈடுபடுகின்றன. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க.வும் களத்தில் இறங்குவதால் 5 முனைப்போட்டி நிலவுகிறது.

சட்டசபை தேர்தல்

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மே மாதம் 16–ந் தேதி நடந்து முடிந்தது. மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் இருந்தாலும், அப்போது 232 தொகுதிகளுக்குத்தான் தேர்தல் நடந்தது. அதாவது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளில் பணப்பட்டுவாடா பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

எனவே, 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அதே மாதம் (மே) 19–ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டன. அ.தி.மு.க. 134 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சீனிவேல் வெற்றி பெற்றார். ஆனால், உடல்நல குறைவு காரணமாக வாக்கு எண்ணும் நாளுக்கு முன்பாகவே (17–ந் தேதி) ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் அதே மாதம் 25–ந் தேதி மரணமடைந்தார். இதனால், புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே திருப்பரங்குன்றம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க – தி.மு.க. நேரடி மோதல்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் 6 மாதங்களில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் நிலையில், இந்த 3 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 19–ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க – தி.மு.க. நேரடி மோதலில் ஈடுபடுகின்றன. அக்கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ரெங்கசாமியும், தி.மு.க. சார்பில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும் களம் இறக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி.பழனிச்சாமியும் போட்டியிடுகின்றனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கே.போஸ்சும், தி.மு.க. சார்பில் டாக்டர் சரவணனும் மோதுகின்றனர்.

5 முனைப்போட்டி

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பாக, அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளிலும் யாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததோ, அவர்களுக்கே தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.மணிமாறனுக்கு பதிலாக தற்போது டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார்.

மேலும், இந்த 3 தொகுதிகளிலும் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் தனியாக களம் இறங்குகின்றன. இதனால், 5 முனைப்போட்டி உருவாகியுள்ளது. மக்கள்நல கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடுமா? என்பது குறித்து, விரைவில் அந்த கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தி அறிவிக்க இருக்கின்றனர். பெரும்பாலும், மக்கள்நல கூட்டணி தேர்தலை புறக்கணிக்கும் என்றே தெரிகிறது.

வேட்பாளர் தேர்வு தீவிரம்

பா.ஜ.க. கூட்டணியில், அரவக்குறிச்சி தொகுதி இந்திய ஜனநாயக கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது 3 தொகுதியிலும் பா.ஜ.க.வே போட்டியிட இருக்கிறது. அந்த கட்சியில் வேட்பாளர் தேர்வும் வேகமாக நடந்து வருகிறது.

பா.ம.க.வில் முன்பு அரவக்குறிச்சியில் ம.பாஸ்கரனும், தஞ்சாவூரில் ஜி.குஞ்சிதபாதமும் களம் இறக்கப்பட்டனர். அவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வேட்பாளர் மாற்றப்படவுள்ளார். அதற்கான தேர்வு நடந்து வருகிறது.

சட்டமன்ற தேர்தலின்போது, மக்கள்நல கூட்டணியுடன் இணைந்து தே.மு.தி.க. போட்டியிட்டது. அந்த கூட்டணியில் அரவக்குறிச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கும், தஞ்சாவூர் தொகுதி தே.மு.தி.க.வுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது 3 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தனித்தே போட்டியிடுகிறது. வேட்பாளர் தேர்வும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மூலக்கதை