விவாகரத்துக்கான காரணம் கூறும் பாலா மனைவி..!

தினமலர்  தினமலர்
விவாகரத்துக்கான காரணம் கூறும் பாலா மனைவி..!

அறியாமையால நான் எடுத்த சில முடிவுகள் தான் இந்த விவாகரத்தை நான் சந்திக்கும் அளவுக்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என கூறியுள்ளார் நடிகர் அன்பு பாலாவின் மனைவியான அம்ரிதா சுரேஷ். தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் தான் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். தமிழில் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையாமல் போனதால், மலையாள சினிமா பக்கம் ஒதுங்கினார். சமீபத்தில் வெளியான புலிமுருகன் படத்தில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டதில் உற்சாகமாக இருக்கிறார் மனிதர்.

இந்த உற்சாகத்தில் தனது கடந்த கால, திருமணம் குறித்த கசப்பான நினைவுகளை மறக்க முயற்சிக்கிறாராம் பாலா. கடந்த 2010ஆம் ஆண்டு பாடகியான அம்ரிதா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார் பாலா. அம்ரிதா சுரேஷ் ஐடியா ஸ்டார் சிங்கர் மூலம் பிரபலமானவர். இவர்களுக்கு அவந்திகா என்கிற மூன்று வயது பெண் குழந்தையும் உண்டு. இந்த விவாகரத்து விஷயம் தொடர்பாக கடந்த வருடமே ஊடகங்களில் செய்திகள் வெளியானபோது கணவன், மனைவி இருவருமே அதை மறுத்து வந்தனர்.. ஆனால் இதோ நீதிமன்றம் அதை உறுதிப்படுத்தியுள்ளது.. பாலா இதுகுறித்து எதுவும் பேசவில்லை..

ஆரம்பத்தில் இந்த விவாகரத்து செய்தியை மறுத்துவந்தாலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார் அம்ரிதா. “வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவள் நான்.. அதனாலேயே அப்பாவித்தனமாக இருந்துவிட்டேன்.. அதன் காரணமாக என் திருமணம் உட்பட அறியாமையால் நான் எடுத்த சில முடிவுகள் தான் இன்று விவாகரத்து வரை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. ஆனால் நல்லவேளையாக வீட்டில் எனது பெற்றோரும், எனது சகோதரியும் என் தரப்பு நியாயத்தை உணர்ந்து எனக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பது ஆறுதலான விஷயம்” என்று கூறியுள்ளார்., விவாகரத்துக்குப்பின் அவர்களது குழந்தை அவந்திகா அம்ரிதாவிடம் தான் இருக்கிறார்.

மூலக்கதை