ராணுவ நடவடிக்கை எதிரொலி இந்தியாவில் உள்ள அனைத்து எல்லைகளும் உஷார்படுத்தப்பட்டது

தினத்தந்தி  தினத்தந்தி
ராணுவ நடவடிக்கை எதிரொலி இந்தியாவில் உள்ள அனைத்து எல்லைகளும் உஷார்படுத்தப்பட்டது

புதுடெல்லி, 
இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, டெல்லியில் உள்ள எல்லை பாதுகாப்பு படை தலைமை அலுவலகம் அதன் அனைத்து பிரிவுகளுக்கும் ஒரு அவசர தகவல் அனுப்பியுள்ளது. ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து சர்வதேச எல்லைகளுக்கும் உயர் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. வீரர்கள் எண்ணிக்கையை உடனே அதிகப்படுத்தி தீவிர கண்காணிப்பிலும், கூடுதல் ரோந்து பணியிலும் ஈடுபட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பு கருதி அட்டாரி–வாஹா எல்லையில் நடைபெறும் நிகழ்வை பார்வையிட நேற்று பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் எல்லையில் பொதுமக்கள் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எல்லை பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தும் பணிகளும் நடப்பதாக வீரர்கள் கூறியுள்ளனர்.

மூலக்கதை