சூர்யாவினால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை
சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘24’. இப்படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்திருந்தார். கால மாற்றங்களை மையப்படுத்தி சயின்ஸ் பிக்சன் கதையாக வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், இப்படம் தற்போது அயர்லாந்தில் டப்லின் நகரில் நடக்கும் 3-வது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் 2016-ஆம் ஆண்டுக்கான மீடியா ஹானர் என்ற பிரிவில் பங்கேற்க உள்ளது. சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் பங்கேற்கும் முதல் தமிழ் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் சூர்யா இதுவரை நடித்த படங்களில் உலக திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் முதல் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.
சூர்யா இப்படத்தில் மூன்று வெவ்வேறு விதமான தோற்றங்களில் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில், இந்த படம் சில்க் ரோடு திரைப்பட விழாவில் பங்கேற்க இருப்பது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் பெருமையான ஒன்றாக கருதப்படுகிறது.