விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை: பார்வர்ட் பிளாக்

தினமணி  தினமணி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்று பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயலர் வி.பி. சைனி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தைவானில் கடந்த 1945-இல் நேரிட்ட விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக லண்டனைச் சேர்ந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தவறான செய்தியாகும். லண்டன் இணையதளத்தின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஆவணங்கள், 24 ஆண்டுகளுக்கு முந்தையவை. நேதாஜி மரணம் தொடர்பாக ஜப்பான்தான் ஆவணங்களை அளித்தது. ஆனால், அந்த ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

தைவான், இந்தியாவுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பிய அறிக்கையில், தங்கள் நாட்டில் நேதாஜி உயிரிழந்ததாக கூறப்படும் விமான விபத்து எதுவும் நேரிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நேதாஜி விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சைனி குறிப்பிட்டார்.

மூலக்கதை