மின் ஊழியர்களுக்கான கால்பந்துப் போட்டி: கோவை அணி சாம்பியன்

தினமணி  தினமணி

கோவையில் நடைபெற்ற மின் ஊழியர்களுக்கான கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோவை அணி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை வென்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான மின் ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 1-ஆம் தேதி தொடங்கின.

இதில், நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை அரை இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், முதலாவது ஆட்டத்தில் சென்னை அணி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் திருச்சி அணியை வீழ்த்தியது. இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் கோவை அணி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் திருநெல்வேலி அணியை வென்றது.

அதைத்தொடர்ந்து, இறுதிப் போட்டியில் சென்னை - கோவை அணிகள் மோதின. இதில், கோவை அணி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது.

பூப்பந்து விளையாட்டு, அரை இறுதிப் போட்டியில் வேலூர் அணி 35-32, 32-35, 35-27 என்ற புள்ளிகள் கணக்கில் திருநெல்வேலி அணியை வென்றது. இரண்டாவது அரை இறுதியில் சென்னை அணி 35-33, 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை அணியை வென்றது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் வேலூர் அணி 35-33, 35-27 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதேபோல, பிரிட்ஜ் விளையாட்டில் இறுதிப் போட்டியில் சென்னை அணி 175-142 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை அணியை வென்றது.

மூலக்கதை