மிளகாய்ப் பொடி குண்டுகள்: ராஜ்நாத் சிங் ஒப்புதல்

தினமணி  தினமணி
மிளகாய்ப் பொடி குண்டுகள்: ராஜ்நாத் சிங் ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு பெல்லட் ரக தோட்டாக்களுக்குப் பதிலாக மிளகாய்ப் பொடி குண்டுகளை பயன்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த பெல்லட் ரக தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டபோது ஏராளமானோரின் கண் பார்வை பறிபோனது.

இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமையில் 7 பேர் கொண்ட உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு, மத்திய அரசிடம் கடந்த மாதம் 29-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், மிளகாய்ப் பொடி குண்டுகளை பயன்படுத்தலாம் என்று அந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது. இதுதொடர்பான கோப்புகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ஒப்புதலை அளித்தார். இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு ஆயிரம் மிளகாய் பொடி குண்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை காஷ்மீரை ஞாயிற்றுக்கிழமை (செப்.4) சென்றடையும் என்று மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார்.

மூலக்கதை