இந்திய வம்சாவளி இளம் கவிஞர்களுக்கு அமெரிக்க அரசு உதவித் தொகை
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு இளம் கவிஞர்களுக்கு தேசிய இலக்கிய உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கான தேசிய கவிஞர் உதவித் திட்டத்தின் கீழ் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது என்று வெள்ளை மாளிகை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 5 இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே தேசிய மாணவர் கலை மற்றும் எழுத்தாளர் திட்டத்தின் கீழ் கவிதைப் பிரிவில் விருது பெற்ற இளம் கவிஞர்களிலிருந்து இந்த 5 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் 9-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களாக இருத்தல் வேண்டும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தேசிய உதவித் தொகை பெறும் ஐவரில் இரு இந்திய-வம்சாவளி மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். ஜார்ஜியா மாகாணம், ஆல்ஃபரெட்டாவைச் சேர்ந்த மாயா ஈஸ்வரன், டெக்ஸாஸ் மாகாணம், டல்லாûஸச் சேர்ந்த கோபால் ராமன் ஆகிய இருவருக்கும், மேலும் 3 மாணவர்களுக்கும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி செப். 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தேசிய இளம் கவிஞர்கள் உதவித் திட்டம் 2011-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள் இதனைப் பெறுவது இது முதல் முறையாகும்.