சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் ஆய்வு காய்ச்சலால்...
சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று காலை வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த ஆய்வின்போது மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் விமலா, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், எந்தவித காய்ச்சல் குறித்தும் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும். அங்கு தயார்நிலையில் டாக்டர் குழுவினர் உள்ளனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றார்.