தாம்பரம் அருகே வீடு புகுந்து 15 பவுன் நகை திருட்டு

தினத்தந்தி  தினத்தந்தி
தாம்பரம் அருகே வீடு புகுந்து 15 பவுன் நகை திருட்டு

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் நம்மாழ்வார் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 35). சென்னையில் உள்ள ஒரு பல்கலைக்கழக விடுதியில் காப்பாளராக வேலை செய்து வருகிறார்.

பரமேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் படுக்கை அறையில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். பின்னர் காலையில் எழுந்து படுக்கை அறை கதவை திறக்க முயன்றார்.  ஆனால் படுக்கை அறையின் வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவரால் கதவை திறக்க முடியவில்லை. உடனடியாக அவர் இது குறித்து பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, அவர்கள் வந்து கதவை திறந்து விட்டனர்.

வெளியில் வந்து பார்த்தபோது படுக்கை அறையின் அருகில் உள்ள மற்றொரு அறையில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக பீர்க்கன்காரணை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மூலக்கதை