முதல்வர் பொது நிவாரண நிதி: 5 பேருக்கு ரூ.9 லட்சம் நிதி உதவி

தினமணி  தினமணி
முதல்வர் பொது நிவாரண நிதி: 5 பேருக்கு ரூ.9 லட்சம் நிதி உதவி

முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 பேருக்கு ரூ. 9 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், இந்த நிதியுதவிக்கான காசோலைகளை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார்.

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் ஜூலை 4-இல் நந்தினி, நஜ்ஜீ ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வழிப்பறி சம்பவத்துக்கு ஆளாகினர். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த நந்தினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற நஜ்ஜீ காயமடைந்தார். அப்போது, வழிப்பறியில் ஈடுபட்டவரின் வாகனம் மோதி சாலையில் சென்ற முதியவர் சாகர் உயிரிழந்தார்.

இறந்த இருவரின் குடும்ப உறுப்பினர்களான செல்வி, உமாமகேஸ்வரி ஆகியோருக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் 6 லட்சம் வழங்கப்பட்டது. காயம் அடைந்த நஜ்ஜிக்கு அவரது குடும்பத்தாரிடம் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும், டுமிங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம், பல்லவன் நகரைச் சார்ந்த ஜெகதீசன் ஆகிய இருவரும் இருவேறு நாள்களில் கடலில் மீன்பிடித்தபோது உயிரிழந்தனர். இவர்களது இருவரது குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது. மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர்.நடராஜன், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ரா.அழகுமீனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

மூலக்கதை