நடிகர் சங்கத்தில் ஒரு குண்டு ஊசிக்கு கூட சரியாக கணக்கு உள்ளது- நடிகர் விஷால்...

தினத்தந்தி  தினத்தந்தி
நடிகர் சங்கத்தில் ஒரு குண்டு ஊசிக்கு கூட சரியாக கணக்கு உள்ளது நடிகர் விஷால்...

சென்னை,

நடிகர் விஷால் அவரது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.

இதையட்டி சென்னை மாவட்ட விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் சென்னை மெர்சி ஹோம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இன்று காலை உணவு மற்றும் பல்வேறு உதவிகளை வழங்கினார்.

இதை தொடர்ந்து நடிகர் விஷால் திருவல்லிகேணியில் உள்ள கஸ்தூரி காந்தி அரசு மருத்துவமனை சென்றார். அங்கு  இன்று பிறந்த 20குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.இதில் வி.எப்.எப்  மேலாளர் முருக ராஜ் , விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்க மாநில தலைவர் ஜெயசீலன் ,செயலாளர் ஹரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேட்டி
பின்னர் நடிகர் விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

இப்போது திடீரென்று நாங்கள் துணை நடிகர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.  இந்த நடிகர் சங்கம் செயல்படுவதே துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு வேலை கொடுப்பதற்கு தான். நாங்கள் குருதட்சணை என்னும் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கொடுத்து வருகிறோம். இதை கிட்டத் தட்ட 16 நாயகர்கள் சேர்ந்து மாதம்2000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கி வருகிறோம். 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் நாங்கள் ஓய்வூதியம் வழங்கி வருகிறோம்.

முன்பெல்லாம் துணை நடிகர்கள் 5 வருடம் 10 வருடம் என ரசீதை வைத்து கொண்டு காசே வராமல் அலைந்து வந்தனர். தற்போது நாங்கள் தயாரிப்பாளர்களிடம் பேசியதால் துணைநடிகர்களுக்கு உடனடியாக சம்பளம் கிடைத்து வருகிறது. சர்ச்சைக்குரிய சிலர் தேவை இல்லாமல் வதந்தியை கிளப்பி விடுகிறார்கள்.

துணை நடிகர்கள் அனைவருக்கும் பதவி கிடைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக தான் நாங்கள் எல்லோரும் பதவிக்கு வந்தோம். நாங்கள் யாரும் பதவி ஆசைக்காக வரவில்லை.
நாங்கள் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் வரை போராடுவோம். கட்டி முடித்த பின்னர் துணை நடிகர்களின் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்.

நாங்கள் நடிகர் சங்கத்தில் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. நடிகர் சங்கத்தில் ஒரு குண்டு ஊசிக்கு கூட சரியாக கணக்கு உள்ளது. நாங்கள் எங்களுக்கு பேனா தேவை என்று நடிகர் சங்கத்தில் இருந்து எடுத்தால் கூட பொருளாளர் கார்த்தி அதற்கு அனுமதிக்கமாட்டார். ஏனென்றால் அவர் சிவகுமார் குடும்பத்தில் இருந்து வந்தவர். இங்கே ஊழல் என்ற விஷயத்துக்கு இடமே கிடையாது. அவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறதோ அதை கொண்டு வரட்டும். இவ்வாறு விஷால் கூறினார்.

மூலக்கதை