டிஎன்பிஎல்: திருவள்ளூர் வீரன்ஸ் வெற்றி

தினமணி  தினமணி
டிஎன்பிஎல்: திருவள்ளூர் வீரன்ஸ் வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது திருவள்ளூர் வீரன்ஸ் அணி.

திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற திருவள்ளூர் அணி முதலில் பேட் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த், சதுர்வேத் களமிறங்கினர். இதில் நிஷாந்த் 19 ரன்களில் ஆட்டமிழக்க, சதுர்வேத் நிலைத்து ஆடினார். அந்த அணியில் அவர் மட்டும் அதிகபட்சமாக 38 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்தார்.

அடுத்தபடியாக சஞ்சய் யாதவ் 28 ரன்கள் எடுத்தார். விக்னேஷ் 16, லக்ஷ்மி நாராயணன் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினர். கவின், கேப்டன் ரங்கராஜன், தன்வார், ஷா ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது திருவள்ளூர் அணி. ரோஹித் 5 ரன்களுடனும், ஜெகன்நாத் ஸ்ரீனிவாஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதுரை தரப்பில், ராஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சந்திரசேகர் 2, முருகானந்தம், சந்திரன் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய மதுரை அணியில், தொடக்க ஆட்டக்காரர் வருண் நரேந்தர் 32 ரன்கள் எடுத்தார். உடன் வந்த விக்னேஷ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். சந்திரன் சிறிது நிலைத்து 32 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்தார்.

சுரேஷ் குமார் 22 ரன்கள் எடுக்க, அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர்.

20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வீழ்ந்தது மதுரை அணி. தியாகராஜன் 5, லக்ஷ்மி நாராயணன் விக்னேஷ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். திருவள்ளூர் தரப்பில் ரோஹித் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

 

மூலக்கதை