புத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் வடக்கு மாகாணசபை, ஜனாதிபதிக்கு கடிதம்
கிளிநொச்சியில் கனகாம்பிகை அம்பாள் கோவிலுக்கு உரித்தான காணி வளாகத்தில் புத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் வடக்கு மாகாணசபை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கிளிநொச்சியில் புத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.
இது ஒரு வெளிப்படையான நில ஆக்கிரமிப்பாகும் என்றும், அரசாங்கம் பாடுபடும் மத நல்லிணக்கம், மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கு எதிரானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு எழுதிய கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது :-
அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு.
கிளிநொச்சியில் புத்த கோவில் அமைத்தல்
முதலாவது, வடக்கு மாகாணசபையின் 2016.08.16 ஆம் திகதிய 58வது அமர்வின்போது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் தங்கள் மேலான தகவலுக்கும் நடவடிக்கைக்குமாக கீழ தரப்படுகினறது.
‘கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாள் கோவில் உரித்தான காணி வளாகத்தில் புத்தகோவில் நிர்மானிக்கப்படுவது தொடர்பாக ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. கோவிலுக்குச் சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமித்து புத்தவிகாரரையினை நிர்மானிக்கின்றார்கள்.
இது ஒரு வெளிப்படையான நில ஆக்கிரமிப்பாகும். அத்துடன் மத நல்லிணக்கம், மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு முற்றிலும் எதிரானதாகும்.
ஆகவே இதில் தலையிட்டு நிர்மான வேலைகளை நிறுத்தி, ஆலய நிர்வாக சபையிடம் நிலத்தினை மீள கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு ஜனாதிபதி அவர்களையும், கொரவ பிரதம மந்திரி அவர்களைம் இந்த சபை கோருகின்றது.’
சீ.வீ.கே.சிவஞானம்
அவைத் தலைவர்,
வடக்கு மாகாணசபை