ஆனையிறவில் உப்பு அறுவடை நாள்!
1937ஆம் ஆண்டு ஆனையிறவில் ஆரம்பிக்கப்பட்ட உப்பளமானது தொடர்ந்து செயற்பட்டவேளையில் கடந்த 1990ஆம் ஆண்டு யுத்தத்தினால் செயலிழந்த நிலையில், இன்று மீண்டும் ஆனையிறவு உப்பளத்தில் உப்பு அறுவடை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு மக்களுக்கு புதிய வாழ்வாதாரத்திற்கான செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 100 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய தினம் உப்பு அறுவடை ஆரம்பித்துள்ளதுடன், உப்பளத்திற்கான கட்டடத் தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், மற்றும் கண்டாவளைப் பிரதேச செயலாளர் முகுந்தன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உப்பு அறுவடை செய்தல் மற்றும் அடிக்கல் நாட்டு விழா என்பவற்றில் பங்குகொண்டிருந்தனர். அத்துடன் உப்பள ஊழியர்களும் அதிகாரிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இந்த உப்பளத்திலிருந்து கடந்த காலத்தில் 5000 மெட்ரிக்தொன் உப்பு விளைவிக்கக்கூடியதாக இருந்ததெனவும் தற்போது மேற்கொள்ளப்பட்ட அறுவடையின் பின்னர் 8000மெட்ரிக்தொன் உப்பு விளைவிக்கக்கூடியதாகவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு கடந்த காலத்தில் 650 ஊழியர்கள் இங்கு பணியாற்றியபோதிலும் தற்போது 31 பணியாளர்களே வேலை செய்வதனை அவதானிக்க முடிகிறது. அத்துடன் இன்றைய தினம் இயந்திர இயக்குனர்கள் மற்றும் சிற்றூழியர்கள் ஐம்பது பேருக்கு நியமனம் வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.