இலங்கைத் தமிழர்கள் குறித்து சேரன் பேசியது தேவையற்றது: விஷால்

தினமணி  தினமணி
இலங்கைத் தமிழர்கள் குறித்து சேரன் பேசியது தேவையற்றது: விஷால்

சென்னையில் படவிழா ஒன்றில் பேசிய இயக்குநர் சேரன், தமிழகத்தில் திருட்டு டிவிடி அதிகரித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவதை அறிந்து வேதனைப்படுகிறேன் என்று பேசினார். இதனையடுத்து அவருடைய பேச்சுக்குப் பரவலாகக் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் சேரன் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நான் எதற்காக பேசினேன், யாரைப்பற்றி பேசியிருப்பேன் எனப் புரிந்திருக்கும்... என்னைத் தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது....? இதுவரை திரையுலகில் வெளிநாடுகளில் இருந்து திருட்டு டிவிடி வருகிறது. ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது இந்த விமரிசகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களையும் அவர்களது செயல்களையும் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை.. அப்போது எங்களுடைய வாழ்க்கை பற்றி அவர்களுக்குக் கவலை இல்லையா?

உலகெங்கும் உள்ள நண்பர்களைக் கொண்டு (அவர்களும் இலங்கைத் தமிழர்கள்தான்) C2H நிறுவனக்கிளைகள் தொடங்க முயன்றபோது அவர்களைத் தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்... ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு... நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்.. அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள் என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷால் ட்விட்டரில் கூறியதாவது: ஒருபட விழாவில் இலங்கைத் தமிழர்கள் குறித்து இயக்குநர் சேரன் பேசியிருப்பது தேவையற்றது. இலங்கைத் தமிழர்கள்மீது குற்றச்சாட்டுகளை வைப்பதைத் தவிர்ப்போம். அவர்கள் இப்போதாவது நிம்மதியாக வாழட்டும் என்றார்.

மூலக்கதை