தென்கொரியா விமானத்தில் திடீர் புகை – 300 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள விமான நிலையத்தில் தென்கொரியா நாட்டுக்கு சொந்தமான விமானத்தில் திடீரென புகை எழுந்ததால் அதில் இருந்த 300 பயணிகளும் அவசரவாயில் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் இருந்து தென்கொரியா நாட்டுக்கு சொந்தமான விமானம் சியோல் நகரை நோக்கி புறப்பட தயாரானது. அப்போது, விமானத்தின் இடதுப்புற என்ஜினில் இருந்து திடீரென புகை எழுந்தது.
இதையடுத்து, நான்கு அவசரவாயில்களும் திறக்கப்பட்டன. உள்ளே இருந்த 302 பயணிகளும், விமானி, துணைவிமானி, பணிப்பெண்கள் உள்ளிட்ட 17 பணியாளர்களும் அவசரவாயில் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
அதற்குள் விரைந்துவந்த தீயணைப்பு வாகனங்கள் நுரையை பீய்ச்சியடித்து புகையை கட்டுப்படுத்தின. இதனால் கடற்கரையோரம் அமைந்துள்ள ஹனேடா விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. விமான ஓடுபாதையை ஒட்டியுள்ள புல்வெளியில் நின்றபடி ஏராளமான மக்கள் விமானத்தின்மீது நுரையை தெளிக்கும் காட்சியை வேடிக்கை பார்த்தனர்.