400 ஆண்டு தடையை மீறி சனி பகவான் கோவிலுக்குள் நுழைந்த பெண்கள்
400 ஆண்டுகளாக பெண்கள் நுழையக் கூடாது என்ற தடையை சட்டப்பூர்வமாக உடைத்து சிங்கனாப்பூர் சனி பகவான் கோவிலுக்குள் பெண்கள் சென்று வழிபாடு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டம் அருகே உள்ள சிங்கனாப்பூர் சனி பகவான் கோவில் கருவறைக்குள் பெண்கள் சென்று வழிபட 400 ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது.
பூமாதா என்ற பெண்கள் அமைப்பினர் இதனை கண்டித்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் கடந்த 1ம் திகதி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த தீர்ப்பில், கோவிலுக்குள் சென்று வழிபடுவது பெண்களின் அடிப்படை உரிமை.
பெண்கள் கோவிலுக்குள் செல்வதை யாராவது தடுத்தால், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை என்று உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கோவிலின் நிர்வாக குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
அந்த ஆலோசனையின் முடிவில் பெண்களை கோவில் கருவறைக்குள் அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பெண்கள் சனீஸ்வர பகவான் சிலை அமைந்துள்ள உட்பிரகாரத்திற்குள் சென்று வழிபாடு நடத்தியுள்ளனர்.