பெண் துணை விமானி இல்லாமல் விமானத்தை இயக்க மறுத்த விமானி: ஏர் இந்தியா கண்டனம்
குறிப்பிட்ட பெண் துணை விமானி இல்லாமல் விமானத்தை இயக்க மறுத்த விமானியின் செயலுக்கு ஏர் இந்தியா நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து திருவனந்தபுரம் வழியாக மாலத்தீவுகளுக்குச் செல்வதற்காக ஏர்-இந்தியாவுக்கு சொந்தமான விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த புதனன்று தயாராக இருந்தது.
அந்த விமானத்தில் மொத்தம் 110 பயணிகள் பயணம் செய்வதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் விமானம் இயக்கப்படாமல் காலதாமதமானது.
அப்போது, அதிகாரிகள் விமானியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சக பெண் விமானி இல்லாமல் தன்னால் விமானத்தை இயக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சுமார் 2 மணி நேரம் விமானத்தின் புறப்பாடு காலதாமதமானது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு ஏர் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அஸ்வானி லொஹனி கூறியதாவது, இது போன்ற ஒழுங்கீன செயல்கள் ஏர் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய செயல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.