நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு: 3 நபர்கள் படுகாயம்
ஆந்திர மாநிலம் சித்தூரில் நீதிமன்ற வளாகத்திலேயே குண்டு வெடித்துள்ள சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாகன நிறுத்த பகுதியில் திடீரென்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா மற்றும் அவரின் கணவர் ஆகியோர் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.
இதில் அவர்களின் உறவினர்களே ஈடுபட்டுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து,
இது தொடர்பான வழக்கு சித்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளிகளை பொலிசார் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது, வாகன நிறுத்த பகுதியில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. பதட்டமான நிலையில் நீதிமன்றத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடியுள்ளனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் உயிர் அபாயம் எதுவும் இல்லை எனவும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது,
நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.