அசாம் சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தல்: 6 சதவீதம் வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள்

மாலை மலர்  மாலை மலர்
அசாம் சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தல்: 6 சதவீதம் வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள்

புதுடெல்லி, மார்ச் 31-

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி முதல் மே மாதம் 16ஆம் தேதி வரை பலகட்டங்களாகத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது.

அசாம் மாநிலத்தில் முதற்கட்டமாக மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 65 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாம் மாநில முதல்-மந்திரி தருண் கோகாய் உள்ளிட்டோர் முதற்கட்ட தேர்தலில் பங்கேற்க உள்ளனர்.

இரண்டாம் கட்டமாக 61 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 21-ம் தேதி கடைசி தேதியாகும். முதல்கட்டத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கான களத்தில் உள்ள வேட்பாளர்களில் சுமார் 6 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மொத்தமுள்ள 539 வேட்பாளர்களில் 30 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் கொலை, கடத்தல், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட குற்றச்சட்டுக்களில் சிக்கியவர்கள்.

பா.ஜ.க.,வை சேர்ந்த வேட்பாளர் குஷல் தோவாரி மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஜனார்தன் ஆகியோர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கட்சி வாரியாக பார்த்தால் காங்கிரசில் மொத்தமுள்ள 65 வேட்பாளர்களில் 8 பேரும், பா.ஜ.க.,வில் மொத்தமுள்ள 54 பேரில் 3 பேரும் இதில் உள்ளனர்.

மூலக்கதை