பேரையூர் அருகே மனைவி வெட்டிக்கொலை: டீக்கடைக்காரர் வெறிச்செயல்

மாலை மலர்  மாலை மலர்
பேரையூர் அருகே மனைவி வெட்டிக்கொலை: டீக்கடைக்காரர் வெறிச்செயல்

பேரையூர், மார்ச். 30–

பேரையூர் அருகே இன்று காலை நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டி கொன்ற டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சிலைமலைப்பட்டியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது55). அங்கு டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தங்கத்தாய் (50).

இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. 3–வது மகள் தனியார் கல்லூரியிலும், மகன் டி.கல்லுப்பட்டி பள்ளியில் பிளஸ்–2 வகுப்பும் படித்து வருகிறார்கள்.

ராஜாமணி அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். மேலும் மனைவியின் நடத்தையின்மீது சந்தேகம் கொண்டிருந்தார்.

இன்று காலை தங்கத்தாய் வீட்டு முன்பு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாமணி இது குறித்து கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜாமணி மனைவி என்றும் பாராமல் தங்கத்தாயின் கழுத்தை அரிவாளால் அறுத்தும், உடலில் வெட்டி விட்டும் ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த தங்கத்தாயை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாமணியை கைது செய்தனர்.

மூலக்கதை