பிரான்ஸில் விமான போக்குவரத்து பாதிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு
பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் உள்ள Orly விமான நிலையம், Beauvais, Lyon, Nice மற்றும் Marseille ஆகிய 5 முக்கிய விமான நிலையங்களில் பணிபுரிந்து வரும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள் எதிர்வரும் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 2 நாட்களில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால், நாடு முழுவதும் விமான போக்குவரத்து பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் சிவில் விமான போக்குவரத்து துறையான DGAC நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ‘ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், பயணிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன் பாதுகாப்பு பிரச்சனைகளும் எழ வாய்ப்புள்ளது.
எனவே, இதனை தவிர்க்க விமான நிறுவனங்கள் 20 சதவிகித விமான சேவையை குறைக்க வேண்டும்’.
மேலும், விமான சேவையை பயன்படுத்த உள்ள பயணிகள் முன்கூட்டிய விமானங்களின் நிலவரங்கள் குறித்து அறிந்துக்கொள்ள வேண்டும்’ என பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் மூன்றாவது பெரிய தொழிற்சங்கமான Unsa என்ற சங்கம் தான் தற்போது இந்த வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க விமான நிறுவனங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த போராட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.