ஞானசார தேரர் வைத்தியசாலைக்கு மாற்றம் ஏனையவர்களையும் கைது செய்ய உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட மூன்று குற்றச் சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் விதித்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் கலகம் விளைவிக்கும் வண்ணம் செயற்பட்ட பிக்குகள் உள்ளிட்டோரை கைது செய்யுமாறு ஹோமாகம ஞானசார தேரர் நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைக்கு தடையேற்படுத்தல் , அரச ஊழியருக்கு அச்சுறுத்தல் விடுத்தல், அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், சட்ட விரோத கூட்டத்தின் உறுப்பினராக இருத்தல், பொலிஸாரை தாக்கியமை, நீதிமன்றிலிருந்து வழக்குப் பொருட்களை எடுத்துச் சென்றமை உள்ளிட்ட 11 குற்றச் சாட்டுக்களின் கீழ் இவர்களை கைது செய்வது குறித்து சாட்சியங்கள் திரட்டப்பட்டு அது தொடர்பில் ஹோமாகம பொலிஸாரினால் நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். தண்டனைக்கோவையின் 316 314 410 183 ஆகிய பிரிவுகளை குறித்த சந்தேக நபர்கள் மீறியுள்ளதாக அந்த அறிக்கையில் பொலிஸார் சுட்டிக்காட்டியிருந்தனர். இதனையடுத்தே சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் புானசார தேரர் குறித்த வழக்கை பெப்ரவரி 9 ஆம் திகதியிலிருந்து 11 ஆம் திகதிக்கு நீதவான் மாற்றியுள்ளார்.
இதனிடையே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை அவர் இவ்வாறு சிறைச் சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார். சிறுநீர் கடுப்பு நோய் காரணமாக வழமையாக ஞானசார தேரர் உட்கொள்ளும் மருந்தை இரு நாட்களாக அவர் உட்கொள்ளாததால் அவர் சுகயீனமுற்றதாகவும் அதனாலேயே அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
முன்னதாக நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வெலிக்கடை சிறையில் பிரத்தியேக இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.. ஞானசார தேரரை வேறு கைதிகள் இல்லாத எவரும் இலகுவில் நுழைந்து விட முடியாத பிரத்தியேக இடத்திலேயே வைத்திருந்ததாகவும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைமைகளை கருத்தில் கொண்டே இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஸான் தனசிங்ஹ தெரிவித்தார்.
சிறைச் சாலை உள்ளக தகவல்களின் பிரகாரம், கலகொட அத்தே ஞானசார தேரர் வெலிக்கடை சிறை வளாகத்தில் உள்ள கொழும்பு விளக்கமறியல் சிறையில் ‘எச்’ பிரிவில் ஆரம்பத்தில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ளார். நேற்று குறித்த பிரிவில் ஞானசார தேரருடம் இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அதிபர் ஒருவரும் ஆசிரியர் ஒருவரும் இருந்ததாக அறிய முடிகின்றது. ஞானசார தேரரின் பாவனைக்காக நிலத்தில் மெத்தை ஒன்று போடப்பட்டிருந்ததாகவும் சிறைச்சலைக்கு வந்தது முதல் தேரர் அவ்வப்போது சிறைச் சாலை அதிகாரிகளுக்கு தர்ம உபதேசம் செய்ததாகவும் அறிய முடிகின்றது.
நேற்று காலை சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவினை காலை உணவாக ஞானசார தேரர் ஏற்றுக்கொண்டதாகவும் பகல் அவரை பார்க்க வந்த பிரமுகர்கள் வழங்கிய உணவினை அவர் பெற்றுக்கொண்டதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
இந் நிலையில் ஞானசார தேரர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திலும் பாதுகாப்பு நேற்று அதிகரிக்கப்ப்ட்டிருந்தது. வெலிக்கடை சிறை வளாகத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு நேற்று உட்படுத்தப்பட்டன.
இதேவேளை பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து நேற்றும் குறித்த நீதிமன்ற வள ாகத்துக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை முதல் நேற்று பிற்பகல் ஒரு மணி வரை இந்த பாதுகாப்பு நீடித்தது.
நான்கு உதவி பொலிஸ் அத்தியட்சர்களின் நேரடி கட்டுப்பாட்டில் மூன்றடுக்காக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்ப்ட்டிருந்தன. நேற்று காலை பொது பலசேன உள்ளிட்ட அமைப்புக்களின் பெளத்த பிக்குகள் பலர் ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்ய ஹோமாகம நீதிவான் நீதிமன்றுக்கு வருவதாகவும் இதன் போதும் பதற்ற நிலையை அவர்கள் தோற்றுவிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்த நிலையிலேயே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நுகேகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களில் இருந்தும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட பொலிஸார் ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் அமைந்துள்ள பகுதிக்கு வரவலைக்கப்பட்ட நிலையில் கலகத் தடுப்புப் பொலிஸாரும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் மேலதிக பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர். அத்துடன் தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளவும் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும் நேற்று பிற்பகல் வரை குறித்த தேரர்கள் வருகை தரவில்லை என்பதுடன் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனையடுத்து நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் நீதிமன்றுக்கு போடப்ப்ட்டிருந்த மூன்றடுக்கு பாதுகாப்பில் இரு அடுக்குகள் தளர்த்தப்பட்டு சாதாரண பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தன.
நேற்றைய தினம் ஹோமாகம நீதிமன்றுக்கு செல்லும் சந்தியில் போக்கு வரத்து தடைகளை ஏற்படுத்தியிருந்த பொலிஸார் , நீதிமன்றுக்கு செல்லும் ஒழுங்கை மற்றும் நீதிமன்ற வாயில் என்பவற்றில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர். நீதிமன்ற வளாகத்துக்குள்ளும் பொலிஸ் பாதுகாப்பு போடப்ப்ட்டிருந்தது. குறிப்பாக நீதிமன்றின் பிரதான வாயிலின் அருகே உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் இருவர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் கலகத் தடுப்புப் பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்ப்ட்டனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சென்றோர் கடுமையான சோதனைகளுக்கும் இதன் போது உட்படுத்தப்பட்டனர். எவ்வாறாயினும் நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஹோமாகம நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தன.
2016-01-28