சிரிய சமாதானப் பேச்சுக்கள் நாளை (29ஆம் திகதி) ஜெனீவாவில் ஆரம்பம்!
Thursday, 28 January 2016 05:08
சிரியாவின் உள்நாட்டு மோதல்களை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு ஐக்கிய நாடுகள் முன்னெடுத்துள்ள சமாதானப் பேச்சுக்கள் நாளை வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
சிரியாவிற்கான அமைதிப் பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சிகள் சார்பில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் என்பதில், தொடர்புடைய நாடுகளிடையே கருத்து வேறுபாடு நீடிக்கின்றன.
இதனால், கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த அமைதிப் பேச்சுவார்த்தை நாளை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் ஸ்டெபான் டி மிஸ்டுரா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் யாருக்கு அழைப்பு விடுப்பது என்பதில், அமைதி முயற்சியை மேற்கொண்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட 17 நாடுகளுக்கிடையே தான் கருத்து வேறுபாடு நீடித்து வருகின்றது.