‘அரசியல் கைதிகள் யாருமில்லை’ என்று ஜீரணிக்க முடியாத பொய்களை ரணில் கூறுகின்றார்: விக்ரமபாகு கருணாரத்ன

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
‘அரசியல் கைதிகள் யாருமில்லை’ என்று ஜீரணிக்க முடியாத பொய்களை ரணில் கூறுகின்றார்: விக்ரமபாகு கருணாரத்ன

Thursday, 28 January 2016 04:30

“இலங்கையில் அரசியல் கைதிகள் என யாரும் இல்லை” என்று ஜீரணிக்க முடியாத பொய்க் கதைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக சொல்லி வருகின்றார் என்று நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். 

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளதாவது, “உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகள் ஏராளமானோர் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருக்கையில், வெளிநாட்டுக்குச் சென்று அரசியல் கைதிகள் யாருமில்லை என்று தெரிவிப்பதன் மூலம் அரசாங்கத்துக்கு அவப்பெயர் ஏற்படும்.

பிரதமரின் கருத்து ஜீரணிக்க முடியாத பொய்க்கதை. இலங்கையின் சிறைச்சாலைகளில் தமிழ், சிங்கள அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். சிறைகளில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களது சொந்தத் தேவைகளுக்காக குற்றங்களை இழைத்தவர்கள் அல்லர்.

அரசியல் ரீதியாக செயற்பட்டு இது குற்றமென கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் கைதுசெய்யப்பட்டு பின் வாக்குமூலம் அளித்ததன் பின்னர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியல் கைதிகளே. இந்த நிலையில் வெட்கம் இன்றி பிரதமர் ரணில் வெளிநாடுகளில் இவ்வாறு தெரிவித்துவருவதன் மூலம் விவரம் அறிந்தவர்கள் வாய்விட்டுச் சிரிப்பார்கள்.” என்றுள்ளார்.

மூலக்கதை