ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 4 போலீசார் பலி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 4 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் சண்டாபூர் கிராமத்திற்கு உட்பட்ட பாலாமு வனப்பகுதியில் துணை ராணுவப் படையினருடன் இணைந்து அம்மாநில போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மாவோயிஸ்டுகள் வைத்த கண்ணிவெடி தாக்குதலில் போலீஸ் வாகனம் ஒன்று சிக்கியது. இதில், 4 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 போலீசார் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சத்தீஷ்கர் மாநிலம் தண்டே வாடா மாவட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று நக்சல்கள் உயிரிழந்தனர். அங்குள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மறைந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து குறிப்பிட்ட இடத்தை முற்றுகையிட்டு போலீசார் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே மூன்று நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பியோடிய மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.