உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு புது முடிவுதுறைமுகங்களுடன் இணைந்த வளர்ச்சி: கடலோர பொருளாதார மண்டலம் அமைக்க திட்டம்
உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு புது முடிவு
01:01:29Wednesday2016-01-27
* சிறப்பு பொருளாதார மண்டலம் போலவே சலுகைகள் கிடைக்கும்.
* துறைமுகங்கள் அருகில் இருப்பதால் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம்.
* மாநிலங்களுக்கு ஏற்ப அல்லாமல் ஒரே மாதிரியான சலுகை.
* சீனாவை முன்மாதிரியாக கொண்டு புது முயற்சி.
புதுடெல்லி: உற்பத்தியை அதிகரிக்க கடலோர பொருளாதார மண்டலங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் கடலோர பகுதி சுமார் 7,500 கிலோ மீட்டர் நீளத்துக்கு இருக்கிறது. இதையொட்டி பல மாநிலங்கள் உள்ளன. துறைமுகங்களும் உள்ளன. இதை உற்பத்தி துறைக்கு சாதகமாக பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்களை போல, இங்கு கடலோர பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டின் உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடலோர பொருளாதார மண்டலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
சிறப்பு பொருளாதார மண்டலங்களை போலவே இவை இருக்கும். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வரி விலக்கு, விரைவான தொழில் அனுமதி, 24 மணி நேர மின்சார வசதி, பாதுகாப்பு போன்றவை வழங்கப்படும். இதுபோன்றே கடலோர பொருளாதார மண்டலங்களிலும் சலுகை வழங்கப்படும். இங்கு முதலீடு செய்பவர்களுக்கு ஊக்க சலுகைகள், இதையொட்டிய நகரங்கள், துறைமுகங்களில் அவர்களுக்கு உரிய வசதிகள் அளிக்கப்படும். கடலோர பகுதியில் உள்ள எந்த நகரமாக அல்லது மாநிலமாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரே மாதிரியான சலுகைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
சீனாவில் இத்தகைய கடலோர பொருளாதார மண்டலங்கள் இருக்கின்றன. இவை முதலீட்டை ஈர்க்க பெரிதும் உதவுகின்றன. இதனால் உள்நாட்டு உற்பத்தி பெருகுவது மட்டுமின்றி, கடலோர பகுதி என்பதால் ஏற்றுமதிக்கும் மிக வசதியாக இருக்கும். எனவே, ஏற்றுமதி நடவடிக்கைகளும் சிறப்பாக இருக்கும்.
இதை முன்னுதாரணமாக கொண்டுதான் இந்தியாவிலும் இதை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் இது கருத்துருவாகவே இருக்கிறது. அனுமதி பெற்ற பிறகு இந்த திட்டம் இறுதி வடிவத்தை அடையும். மேக் இன் இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள இந்த திட்டம் குறித்து பிரதமர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
தமிழகத்துக்கு வாய்ப்பு
கடலோர பொருளாதார மண்டலங்கள் முதற்கட்டமாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்படும்.. இந்த மண்டலங்கள் ஏற்படுத்திய பிறகு, இவற்றில் முதலீடு ஈர்க்கப்படுவதில் பெரிய பிரச்னையோ, தடையோ இருக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.