ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் – ஆசிரியருக்கு பொலிஸ் விசாரணை

கதிரவன்  கதிரவன்
ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் – ஆசிரியருக்கு பொலிஸ் விசாரணை

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தரம் 01முதல் 05 வரையான பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவன் ஒருவனை பேனாவால் தலையில் குத்தியதால் மாணவன் காயங்களுடன் தனது பெற்றோர்கள் மூலம் லிந்துலை வைத்தியசாலையில் 26 ஆம் திகதி அன்று அனுமதிக்கப்பட்டுள்ளான்.

அத்தோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்க்கு எதிராக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவன் நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தெரிய வருவதாவது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணித பாடம் கற்பித்துக்கொண்டு இருக்கும்போது மாணவனுக்கு விளக்கம் தெரியாததால் தன்னுடன் அமர்ந்திருந்த மாணவனிடம் விளக்கம் கேட்டதனால் கோபமுற்ற ஆசிரியர் இவ்வாறு தாக்கியுள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2016-01-27

மூலக்கதை