அரசியலமைப்புக்கான யோசனைகளை வழங்க வடக்கு மாகாண சபையால் விசேட குழு நியமனம்!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
அரசியலமைப்புக்கான யோசனைகளை வழங்க வடக்கு மாகாண சபையால் விசேட குழு நியமனம்!

Wednesday, 27 January 2016 04:53

புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் யோசனைகளை முன்வைப்பதற்காக வடக்கு மாகாண சபையினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது, இதற்கான அவசர பிரேரணையை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கொண்டு வந்தார்.

இதுவரை காலமும் இயற்றப்பட்ட அரசியலமைப்புக்கள் தமிழ் மக்களின் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்படவில்லை என்பதாலும், அரசியலமைப்பு மாற்றம் அல்லது உருவாக்கத்தில் தமிழ் மக்களின் பங்களிப்பு, அவர்களின் உரிமைகளை அரசியலமைப்பின் மூலம் நிலைநிறுத்துவதை உறுதி செய்வது அவசிமென்பதாலும், தமிழ் தேசிய இனத்தின் சுயாட்சிக் கோரிக்கை தொடர்பில் அனுபவங்களை கொண்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் 19 பேர் கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய இனத்தின் சார்பில் முன்வைக்க வேண்டிய முன்மொழிவுகளை வரைந்து இந்த குழு, வடக்கு மாகாண சபையில் சமர்ப்பித்து, அந்த முன்மொழிவுகள் மத்திய அரசாங்கத்திற்கு ஆலோசனையாக வழங்கப்படும். இந்த குழுவின் இணைத்தலைவராக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, அமைச்சர்களான த.குருகுலராஜா, பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம், பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்களான கே.சயந்தன், அ.ரூ.பிறிமூஸ் சிராய்வா, ம.அன்ரனி ஜெகநாதன், ஜி.ரி.லிங்கநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், ப.அரியரத்தினம், எம்.தியாகராசா, ஆ.பரஞ்சோதி, ஆயுப் அஸ்மின், வை.தவநாதன், அனந்தி சசிதரன். இ.ஆனோல்ட், க.சர்வேஸ்வரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

மூலக்கதை