பொது பல சேனாவின் ஞானசார தேரர் விளக்கமறியலில் தடுத்து வைப்பு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
பொது பல சேனாவின் ஞானசார தேரர் விளக்கமறியலில் தடுத்து வைப்பு!

Tuesday, 26 January 2016 09:31

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வேளை, ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபரான ஞானசார தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது. இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகருக்கு, நேற்று நீதவானால் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், ஹோமாகம பொலிஸில் இன்று செவ்வாய்க்கிழமை ஞானசார தேரர் சரணடைந்ததை அடுத்து, கைதுசெய்யப்பட்டார். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை