ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய இரா.சம்பந்தன் பிரித்தானியா பயணம்!
Tuesday, 26 January 2016 05:44
ஐக்கிய இராச்சியத்தில் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்துவது தொடர்பில் நாட்டில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அதிகாரப் பரவலாக்கல் கோரிக்கைகளை முன்வைத்த அரசியலமைப்பு யோசனைகளை முன்வைக்கவுள்ளது. இதுதொடர்பில் ஆராய்வதற்காகவே இரா.சம்பந்தன் பிரித்தானியா சென்றுள்ளார்.
பிரித்தானியா சென்றுள்ள இரா.சம்பந்தனுடன், கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை இணைந்து கொள்வார் என்று தெரிகின்றது.
இதேவேளை, பிரித்தானியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளது. அந்தக் கலந்துரையாடலிலும், இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர், இருவரும் ஸ்கொட்லாந்து செல்லவுள்ளனர்.
இதனிடையே, பிரி்த்தானியா சென்றுள்ள இரா.சம்பந்தன் அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.