சீர்திருத்தங்கள் மூலமே வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும்: அருண் ஜேட்லி
சீர்திருத்தங்களை தொடர்ந்து செய்வதன் மூலமாக தான் வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
தனியார் பத்திரிகை நடத்திய உலக தொழில் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் ஜேட்லி இதனை தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், இருள் சூழ்ந்த நிலையில் இருக்கும் உலக பொருளாதாரத்திற்கு வெளியே இந்தியா நின்று கொண்டிருக்கிறது.
அதனால் கட்டமைப்பு சீர்திருத்தங்களை செய்யவேண்டியது கட்டாயமாகும்.
உள்கட்டமைப்பு, பாசன வசதி, விவசாய உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
நாம் தற்போது வளர்ச்சியடைந்திருப்பதை விட அதிகமான வளர்ச்சியடைய ஆற்றல் இருக்கிறது.
7 சதவீதம் முதல் 7.5 சதவீத வளர்ச்சி என்பது நமக்கு உகந்த வரம்பு அல்ல.
இந்தியா 8 சதவீதம் முதல் 9 சதவீதம் வளர்ச்சியடையும் நாடு. இந்த வளர்ச்சியால் மட்டுமே நாட்டில் ஏழ்மையை ஒழிக்க முடியும்.
மிகப்பெரிய மனித வளத்தை இந்தியா கொண்டிருக்கிறது. அதே போல மிகப் பெரிய சந்தையாகவும் இந்தியா இருக்கிறது.
உற்பத்தியை அதிகரிக்க திறனும் புதிய கண்டுபிடிப்பு திறமையும் நம்மிடம் இருக்கிறது.
உள்கட்டமைப்பு துறை, விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தி துறை ஆகியவற்றில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும்.
அதனால் சீர்திருத்தங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள் அனைத்து எதிர்காலத்தில் நிகழும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.