டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை தொடங்கியது

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 19, ஜனவரி 2016 (9:32 IST)

மாற்றம் செய்த நாள் :19, ஜனவரி 2016 (9:32 IST)

 டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின்

 சாட்சி விசாரணை தொடங்கியது

இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று திங்கள்கிழமை தொடங்கியது.

 சென்னை சூளைமேட்டில் 1986-ஆம் ஆண்டு நவம்பர் 1-இல் 4 பேர் மீது சிலர் துப்பாக்கிச் சுட்டதில், வழக்குரைஞர் திருநாவுக்கரசு இறந்தார். இதுதொடர்பாக டக்ளஸ் தேவானந்தா உள்பட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

 இந்த நிலையில், சென்னை மாவட்ட 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், தேவானந்தா மீதான வழக்கை தனியாகப் பிரித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி காவல் துறை சார்பில் கோரப்பட்டது.  இதன்பேரில், வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் நேரில் ஆஜராகுமாறு அழைப் பாணை அனுப்ப நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.   இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 அப்போது அரசு வழக்குரைஞர் எம்.பிரபாவதி ஆஜராகி, சாட்சிகள் விசாரணையின்போது டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் அல்லது உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுப்படி, விடியோ கான்ஃபரன்சிங் மூலம் அவரிடம் விசாரிக்கவேண்டும் என்று முன்பே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

 அதற்கு நீதிபதி சாந்தி, விடியோ கான்ஃபரன்சிங் வசதியை நீதிமன்றத்தில் செய்து தரக் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு கடிதம் எழுத வேண்டியுள்ளது. அதன்பிறகு, தேவானந்தா நேரில் ஆஜராவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். இதையடுத்து, போலீஸ் தரப்பு சாட்சி குருமூர்த்தி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.   பின்னர் விசாரணையை பிப்ரவரி 1-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

மூலக்கதை