மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சிந்து, ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மற்றொரு இந்திய வீரரான அஜய் ஜெயராம் தோல்வியடைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் 12வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 25வது இடத்தில் உள்ள இந்தோனேசிய வீராங்கனை FANETRI யை எதிர்கொண்டார். 29 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சிந்து 21-10, 21-10 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், ஆடவர் பிரிவு காலிறுதியில் 9வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்த், 76வது இடத்தில் உள்ள சீன வீரர் HUANG யை எதிர்கொண்டார். 33 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-15, 21-14 என்ற நேர் செட்டில் ஸ்ரீகாந்த் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம், போட்டி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள மலேசிய வீரர் லீ சாங் வெ-யிடம் 16-21, 16-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.