124 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி : 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை

கதிரவன்  கதிரவன்
124 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி : 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் 124 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பின்னர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதேவேளை 9 ஆண்டுகளுக்கு பிறகு அந்நிய மண்ணில்  டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா அணி இழந்துள்ளது.

இந்தியா – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.

ஆடுகளம் முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்ததால், எதிர்பார்த்தது போலவே இந்த டெஸ்டும் பந்து வீச்சாளர்களின் போட்டியாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 215 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 33.1 ஓவர்களில் வெறும் 79 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியாவுக்கு எதிராக தென்னாபிரிக்க அணியின் மோசமான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

136 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, தனது 2-வது இன்னிங்சில் 46.3 ஓவர்களில் 173 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளும், மோர்னே மோர்கல் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இதன் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு 310 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 இதையடுத்து சிரமமான இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி நேற்றைய நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 32 ஓட்டங்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

 இன்றும் தென்னாபிரிக்க அணி வீரர்கள்  எதிர்பார்த்தது போலவே வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த அணியில் அம்லா (39 ஓட்டங்கள்) மற்றும் டு பிளஸிஸ் (39 ஓட்டங்கள்) ஓரளவு அணியின் ஓட்டத்தை உயர்தினர்.

 டி வில்லியர்ஸ் உட்பட ஏனைய வீரர்கள் இந்திய சுழலில் சிக்கி வெளியேறினர். இதனால், தென்னாபிரிக்க அணி 89.5 ஓவர்களில் 185 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக  அஷ்வின் 7 விக்கெட்டுகளையும் மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா தனதாக்கியது.

 20 ஓவர் போட்டித்தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அடைந்த தோல்விக்கு இந்தியா பழி தீர்த்துக்கொண்டது.

மேலும், 9 ஆண்டுகளுக்கு பிறகு அந்நிய மண்ணில்  டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா அணி இழந்துள்ளது.

அதேபோல், 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தென் னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றும் சாதனை படைத்துள்ளது.

2015-11-27

மூலக்கதை