மறுபடியும் சாம்பியனாகி ரக்பி உலக கோப்பையை தக்கவைத்துக் கொண்ட நியூசிலாந்து!
Sunday, 01 November 2015 02:10
நியூசிலாந்து அணி ரக்பி உலக கோப்பையை மீண்டும் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த உலக கோப்பை ரக்பி தொடர் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது.
உலகின் முதல் இரு நிலை அணிகளான ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மோதிய இப்போட்டியில் 34-17 எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து அணி.
கடந்த 2011 உலக கோப்பையை ஏற்கனவே வென்றிருந்த நிலையில் இரண்டாவது முறையாக அடுத்தடுத்து உலக கோப்பையை வென்ற ஒரே அணி எனும் சாதனையை நியூசிலாந்து அணி நேற்று நிகழ்த்தியது.
அதோடு ரக்பி உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே ஒரு நாடு எனும் பெருமையையும் நியூசிலாந்து பெற்றது.
நேற்றைய போட்டியில் ஆரம்பம் முதலே புதிய உக்திகளுடன் தனக்கே உரித்தான உத்வேகத்துடன் விளையாடிய நியூசிலாந்து அணி இரண்டாவது பாதி நேர ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியாவின் அடுத்தடுத்த இரு Try முயற்சிகளால் சற்று ஆட்டம் கண்டது. ஆனால் மீண்டும் சளைக்காமல் ஆடி வெற்றியை தனதாக்கிக் கொண்டது. போட்டி நாயனகான நியூசிலாந்து அணியின் டான் கார்டன் தெரிவானார்.