இந்தியா தனிமைப்பட்டுவிடும்! மிரட்டும் இலங்கை உயர்ஸ்தானிகர்
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கும் நாடுகள், அந்த அமைப்பில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாக கருதப்படும் என்று இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம் கூறினார்.
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை இந்தியா பங்கேற்கக்கூடாது என தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காவிட்டால், அதனால் யாருக்கு பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்தக் மாநாடு இலங்கைக்கானது அல்ல; காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் தொடர்புடையது. அதில் பங்கேற்பதும், பங்கேற்காமல் இருப்பதும் இந்திய அரசின் உரிமை.
தமிழக சட்டப்பேரவையில் இந்திய அரசை வலியுறுத்தி கோரிக்கை வைப்பது தமிழக அரசின் உரிமை. அது குறித்து நான் கருத்துக் கூற முடியாது. இலங்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கு சரியான தகவல்களை யாரும் அளிக்கவில்லை என்று கருதுகிறேன்.
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்காமல் தவிர்ப்பது, அந்த அமைப்பில் இருந்தே சம்பந்தப்பட்ட நாடு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும் என்றார் அவர்.